டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல்

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி மூத்த தலைவர் கவிதாவை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Published on

புதுடெல்லி,

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு கடந்த 2021ம் ஆண்டு டெல்லி மாநிலத்திற்கு புதிய மதுபான கொள்கை கொண்டுவந்தது. தனியார் மதுபான நிறுவனங்களுக்கு ஆதரவாக மதுபான கொள்கைகள் கொண்டுவரப்பட்டதாகவும், தனியார் நிறுவனங்கள் டெல்லியில் மதுபான கடைகள் அமைக்க, உரிமம் வழங்க ஆம் ஆத்மி கட்சி முக்கிய தலைவர்களுக்கு லஞ்சம் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதிலும் குறிப்பாக டெல்லியில் மதுபான கடைகள் அமைக்க உரிமம் பெற சவுத் குரூப் என்ற நிறுவனம் ஆம் ஆத்மி கட்சி முக்கிய தலைவர்களுக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறையினர் பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, சவுத் குரூப் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியாக தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரியும், பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவின் மகளான எம்.எல்.ஏ. கவிதா செயல்பட்டு வருகிறார்.

இதையடுத்து, டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் எம்.எல்.ஏ. கவிதாவை கடந்த 15ம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கவிதா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர், அமலாக்கத்துறை காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் கவிதா இன்று மீண்டும் டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கூடுதல் அவகாசம் எதுவும் கேட்கவில்லை. இதையடுத்து, கவிதாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கவிதாவுக்கு வரும் 23ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கவிதா சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு அழைத்து செல்வதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கவிதா, "இது முற்றிலும் எதிர்க்கட்சிகளை குறிவைத்து தொடரும் வழக்கு. எந்த ஒரு ஆதாரமும்  இன்றி அறிக்கையை அடிப்படையாக கொண்ட அரசியல் வழக்கு. சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே சிறையில் எனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com