

புதுடெல்லி,
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) உருவாக்கி உள்ளது. இதன்படி, 3 இந்திய விண்வெளி வீரர்கள், ககன்யான் விண்கலத்தில் பூமியின் கீழ் சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இந்த திட்டம், அடுத்த ஆண்டு நிறைவேற்றப்படுவதாக முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா வைரசால் தாமதம் ஏற்பட்டு, அடுத்த ஆண்டு இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த ஒரு இணையவழி கருத்தரங்கில் மத்திய விண்வெளித்துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-
ககன்யான் திட்டம், கொரோனா காரணமாக தாமதமாகி விட்டது. இருப்பினும், அடுத்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2023-ம் ஆண்டு தொடக்கத்திலோ ககன்யான் விண்கலம் செலுத்தப்படும்.
கடந்த 2015-2016 நிதியாண்டில் விண்வெளி விஞ்ஞானிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. விண்வெளி தொழில்நுட்பத்தை எங்கெல்லாம் பயன்படுத்த முடியும் என்பதை அறிந்து கொள்ள அப்பயிற்சி உதவியது.
உதாரணமாக, பேரிடர் மேலாண்மையில் விண்வெளி தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் விண்வெளி தொழில்நுட்பத்தின் பங்களிப்பு இருக்கிறது என்று அவர் பேசினார்.