

ஐதராபாத்,
தெலுங்கானா மாநில முன்னாள் முதல்-மந்திரியும், பாரத ராஷ்டிர சமிதி(பி.ஆர்.எஸ்.) கட்சி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா. இவர் முன்னாள் எம்.பி. ஆவார். காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தில், தனது தந்தையின் நற்பெயரை கெடுத்ததாக தனது உறவினர்கள் ஹரிஷ் ராவ், சந்தோஷ் குமார் ஆகியோர் மீது கவிதா குற்றம் சாட்டியதையடுத்து அவர் பாரத ராஷ்டிர சமிதியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பின்னர், தனது எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்த கவிதா, ‘தெலுங்கானா ஜக்ருதி’ என்ற கலாசார அமைப்பை தொடங்கி, பொதுப்பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் தெலுங்கானா ஜக்ருதியை அரசியல் கட்சியாக மாற்றுவது குறித்து முன்னாள் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் கவிதா ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.
சமீபத்தில், தெலுங்கானாவின் பிரச்சினைகளை மையமாக கொண்டு இயங்கும் வகையில் இரு அரசியல் கட்சியை தொடங்கப்போவதாக கவிதா அறிவித்தர். இதன்படி, வரும் ஏப்ரல் 25-ந்தேதி காலை 10 மணிக்கு ஐதராபாத் அருகே முனீர்பாத் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தனது புதிய கட்சியின் அதிகாரப்பூர்வ பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்ய உள்ளதாக கவிதா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஐதராபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ”தெலுங்கானா ராஷ்ட்ர சேனா” (TRS) என்ற பெயரில் புதிய கட்சியை கவிதா இன்று தொடங்கினார். சகோதரர் கே.டி.ராமாராவ் ஆதரவாளர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் புதிய கட்சியை கவிதா தொடங்கி உள்ளார்.