

புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ரேடியோ மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் (மன் கி பாத்) நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 133-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. இதில் கோடை விடுமுறையை பள்ளி மாணவர்கள் எவ்வாறு பயனுள்ள முறையில் கழிக்க வேண்டும் என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
இதில் பிரதமர் மோடி பேசியதாவது:-
“கோடை விடுமுறை என்பது வெறும் பாடப்புத்தகங்களில் இருந்து கிடைக்கும் ஓய்வு மட்டுமல்ல. மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான இசை, ஓவியம், விளையாட்டு அல்லது நவீன தொழில்நுட்பம் சார்ந்த புதிய திறன்களை (New Skills) கற்றுக்கொள்ள இந்த நேரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
மகிழ்ச்சியான விடுமுறை கற்றல் ஒருபுறம் இருந்தாலும், விடுமுறை காலத்தை மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடனும், மன அழுத்தம் இல்லாமலும் முழுமையாக அனுபவிக்க வேண்டும். சமுதாயத்திற்குப் பயன் தரும் வகையிலான தன்னார்வப் பணிகளில் (Volunteer activities) மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இது அவர்களின் ஆளுமைத் திறனை மேம்படுத்த உதவும்” என்று கூறினார்.