

பெங்களூரு,
கர்நாடகா மாநிலம் பெங்களூரு கோவிந்தாபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பீகாரை சேர்ந்த தையல்காரர் ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு திருமணமாகி மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். அவருக்கும், பைரன குண்டேவை சேர்ந்த ஜஹாங்கீர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜஹாங்கீர், தையல்காரருக்கு தொழிலில் உதவி செய்து வந்துள்ளார். இதனால் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது மனைவியை ஜஹாங்கீர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அதனை தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து யாரிடமாவது சொன்னால் அந்த வீடியோவை வெளியிடுவதாகவும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்த அந்த பெண் இதனை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட ஜஹாங்கீர் தினமும் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது 3 மகன்களில் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மகன்களுடன் பீகாருக்கு சென்றிருந்தார். பின்னர் கடந்த 10-ந்தேதி அந்த பெண் திரும்ப பெங்களூருவுக்கு வந்திருந்தார். இதனை தெரிந்து கொண்ட ஜஹாங்கீர் மீண்டும் அந்த பெண்ணிடம் உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். இதனை அவர் மறுத்துள்ளார்.
உல்லாசத்துக்கு வரவில்லை என்றால் ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும். இல்லையெனில் ஆபாச வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிடுவேன் என்று ஜஹாங்கீர் மிரட்டி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இதுகுறித்து கோவிந்தாபுரா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ஜஹாங்கீர் மீது பலாத்காரம் செய்தல், பணம் கேட்டு மிரட்டல், ஆபாச வீடியோ எடுத்து துஷ்பிரயோகம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடததி வருகின்றனர். மேலும் தலைமறைவான அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.