

மும்பை,
மும்பையை அடுத்த மும்ரா கைலாஷ்நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து கேலி செய்து வந்துள்ளனர். இதுகுறித்து அந்தப் பெண், தான் அண்ணனாகக் கருதும் ஜெயன் சிவானந்தன் நாயரிடம் (வயது 51) முறையிட்டார். ஜெயன் பல முறை எச்சரித்தும் அந்த கும்பல் கேலி செய்வதை நிறுத்தவில்லை.
நேற்று முன்தினம் இரவு, இளம்பெண்ணை கேலி செய்த அப்துல்அசன், அக்பர்அப்துல் மற்றும் சமீர்அகமது ஆகியோர் பள்ளி ஒன்றின் பின்புறம் நின்றிருந்தபோது, ஜெயன் மீண்டும் அவர்களைக் கண்டித்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஜெயன், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மூன்று பேரையும் சுட்டார்.
இதில் குண்டு பாய்ந்த அக்பர்அப்துல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பியோடிய ஜெயனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.