

புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் மோடியும், பா.ஜனதாவின் தலைவர் அமித்ஷாவும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் மெகா கூட்டணி வைத்து உள்ளனர். பதான் கோட் விமானப்படைத் தளம் மீது ஐ.எஸ்.ஐ. தூண்டுதலின் பேரில்தான் தாக்குதல் நடந்தது. ஆனால் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் ஐ.எஸ்.ஐ. பிரிவினரையும் சேர்த்து ஆய்வு நடத்திட மோடி அரசு பதான் கோட்டுக்கு வரவழைத்தது. இப்போது ஐ.எஸ்.ஐ. அமைப்பின் முன்னாள் தலைவர் ஆசாத் துரானி மோடிதான் இந்திய பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று கூறி இருக்கிறார்.
எனவே, இந்த மெகா கூட்டுக்கு இதைவிட வேறு பெரிய சாட்சியம் என்னவேண்டும்?...எனவே நாட்டு நலன்கள் மற்றும் பாதுகாப்பில் மோடி அரசு நாட்டுக்கு துரோகம் இழைத்துவிட்டது. இதற்காக நாட்டு மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்கவேண்டும்.
தற்போது துல்லிய தாக்குதல் நடத்தியதை மோடி பெருமையாக கூறுகிறார். ஆனால் இதில் எவ்வித அரசியல் ஆதாயத்தையும் அவரோ, அவருடைய கட்சியோ பெற முடியாது என்று அவர் கூறினார்.