ரபேல் விமான பேரத்தில் விசாரணை நடத்தினால் மோடி பதவி தப்பாது - ராகுல் காந்தி

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு பிரான்ஸ் நிறுவனம் ரூ.284 கோடி லஞ்சம் அளித்துள்ளது; ரபேல் போர் விமான பேரத்தில் விசாரணை நடத்தினால் பிரதமர் மோடியின் பதவி தப்பாது என்று ராகுல் காந்தி கூறினார்.
ரபேல் விமான பேரத்தில் விசாரணை நடத்தினால் மோடி பதவி தப்பாது - ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ரபேல் போர் விமான தயாரிப்பில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ததற்கு அந்த நிறுவனத்துக்கு சொந்தமாக நிலம் இருப்பதுதான் காரணம் என்று டசால்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி கூறி உள்ளார். பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (எச்.ஏ.எல்.) நிறுவனத்துக்கு, திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான இட வசதி இல்லாததால், அந்த நிறுவனம் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இப்போது ஒரு விஷயம் தெளிவாகி இருக்கிறது. அதாவது, டசால்ட் நிறுவனம் தந்த பணத்தில்தான் ரிலையன்ஸ் நிறுவனம் அந்த நிலத்தை வாங்கி உள்ளது.

டசால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொய் சொல்கிறார். அவர் ஒருவரை காப்பாற்ற முயற்சிக்கிறார். அவர்தான் இந்த நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அவர் பிரதமர் மோடி. வெறும் ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பு கொண்ட அனில் அம்பானியின் நிறுவனத்தில் டசால்ட் நிறுவனம் ரூ.284 கோடி முதலீடு செய்துள்ளது. நஷ்டத்தை சந்தித்து கொண்டிருக்கிற ஒரு நிறுவனத்தில் அவர்கள் எதற்காக ரூ.284 கோடியை முதலீடு செய்ய வேண்டும்?

டசால்ட் நிறுவனம் லஞ்சமாக கொடுத்த பணத்தின் பல பகுதிகளில் இதுவும் ஒரு பகுதி. அதுவும் முதல் தவணை. இந்த பேரம் பற்றிய தகவல்கள், பிரதமர் மோடியையும், அனில் அம்பானியையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

பிரதமர் மோடி இதில் தனிப்பட்ட முறையில் முடிவு எடுத்தார். ரபேல் பேர ஒப்பந்தத்தில் தனக்கு எந்த பங்களிப்பும் இல்லை என்று ராணுவ மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் தெளிவுபடுத்தி விட்டார். இது தொடர்பாக ஒரு விசாரணையை தொடங்கினால், அதில் பிரதமர் மோடியின் பதவி தப்பாது.

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை பிரதமர் மோடி நீக்கி விட்டார். ஏனென்றால், ரபேல் பேரம் பற்றிய தகவல்கள் அவரிடம் இருக்கின்றன. எனவே இதில் அவர் விசாரணையை தொடங்க விரும்பினார். இதனால்தான் அவரை பதவியில் இருந்து நீக்கி விட்டனர் என்று அவர் கூறினார்.

ராகுல் காந்தி தெரிவித்துள்ள இந்த கருத்துகள் குறித்து மத்திய அரசு சார்பில் எந்த விளக்கமும் உடனடியாக அளிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com