நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: மேலும் 2 மருத்துவ மாணவர்கள், பி.டெக். பட்டதாரி கைது

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. இதுவரை 6 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. அப்போது, பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. வினாத்தாளை திருடி, அவற்றுக்கு மருத்துவ மாணவர்கள் மூலம் விடை எழுத வைத்து, நீட் தேர்வர்களுக்கு விற்று பணம் சம்பாதித்ததாக தெரிய வந்தது. இந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. இதுவரை 6 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் நீட் தேர்வு வினாத்தாளை திருடியதாக பங்கஜ் குமார் என்ற என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். அவரது ஏற்பாட்டில், வினாக்களுக்கு பதில் குறித்துக்கொடுத்த ஒரு மருத்துவ மாணவியும், 4 மருத்துவ மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று மேலும் 2 மருத்துவ மாணவர்களை சி.பி.ஐ. கைது செய்தது. அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்கள். 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வரும் குமார் மங்கலம் பிஷ்னோய், முதலாம் ஆண்டு மாணவர் தீபேந்தர் சர்மா ஆகியோர் கைதானவர்கள் ஆவர்.

இவர்கள் நீட் தேர்வு நடந்த மே 5-ம் தேதி, ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் இருந்துள்ளனர். பங்கஜ் குமார் ஏற்பாட்டில், நீட் வினாக்களுக்கு பதில் குறித்து கொடுத்துள்ளனர். மேலும், இவ்வழக்கில், ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் படித்த பி.டெக். பட்டதாரி சசிகாந்த் பஸ்வான் என்பவரையும் சி.பி.ஐ. கைது செய்தது. இவரும் பங்கஜ் குமாருக்கு உடந்தையாக, மூளையாக செயல்பட்டுள்ளார்.

இதன்படி நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் கைதானவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com