

புதுடெல்லி,
ரெயில் டிக்கெட்டுகளை ரத்து செய்யும்போது பணம் திரும்பப் பெறுவது தொடர்பான நடைமுறையில் மாற்றம் செய்து இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது. மேலும் இந்த புதிய நடைமுறை வருகிற ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறையின்படி, உறுதிசெய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டை (Confirm Ticket), ரெயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக ரத்து செய்தால், குறைந்தபட்ச ரத்து கட்டணம் (Cancellation Charges) மட்டுமே பிடித்தம் செய்யப்படும். இதன் மூலம் அதிகபட்ச தொகையை திரும்ப பெறலாம்.
ரெயில் புறப்படுவதற்கு 72 மணி முதல் 24 மணி நேரத்திற்கு முன்னதாக டிக்கெட்டை ரத்து செய்தால், பயணக் கட்டணத்தில் 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். ரெயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முதல் 8 மணி நேரத்திற்கு முன்னதாக டிக்கெட்டை ரத்து செய்தால், பயணக் கட்டணத்தில் 50 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். ரெயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் டிக்கெட்டை ரத்து செய்தால், பணம் திரும்ப அளிக்கப்படமாட்டாது.
இந்த நடவடிக்கையின் மூலம் ரெயில்களில் காலியாகும் இருக்கைகளை குறைத்து, அவற்றை மற்ற பயணிகளுக்கு வழங்கும் வாய்ப்பை அதிகரிக்க முடியும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள் முன்கூட்டியே தங்களது பயணத் திட்டங்களை உறுதிப்படுத்தினால், ரெயில் சேவையின் செயல்திறன் மேம்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரெயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை பயணிகள் தாங்கள் ஏறும் இடத்தை (Boarding Point) மாற்றிக்கொள்ளவும் ரெயில்வே அனுமதித்துள்ளது. பல ரெயில் நிலையங்களை கொண்ட நகரங்களில் உள்ள பயணிகள், தங்களுக்கு வசதியான எந்த ரெயில் நிலையத்திலிருந்தும் ஏற இந்த வசதி உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, பயணப் பட்டியல் தயாரிக்கப்படுவதற்கு முன்பு வரை மட்டுமே ஏறும் இடத்தை மாற்ற அனுமதிக்கப்படுகிறது.