

புதுடெல்லி
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதனால், உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளிலும் அத்தியாவசிய உபயோகத்திற்கான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இந்த சூழலில், இந்தியாவில் வீட்டு உபயோக மற்றும் வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்தது. சில இடங்களில் வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகள் மூடப்பட கூடிய அபாய சூழல் காணப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதுவும் இல்லை என மத்திய பெட்ரோலிய துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி இன்று கூறினார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாம் பல்வேறு வழிகளில் மற்றும் வெவ்வேறு இடங்களில் இருந்து இந்தியாவுக்கான எரிபொருள் இறக்குமதி செய்வது தொடர்ந்து நடந்து வருகின்றது.
இதுபற்றி ஊடகத்தினரிடம் இன்று விவாதித்தோம். இந்தியாவில் சி.என்.ஜி. மற்றும் பி..என்.ஜி. ஆகிய வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் வினியோகம் முழுமையாக பாதுகாக்கப்பட்டு உள்ளது. அதனால், பயப்பட வேண்டிய தேவையில்லை என கூறினார். போர் சூழலிலும், ஆலைகளுக்கான 70 முதல் 80 சதவீத எரிபொருள் வினியோகம் இருக்கும் என அவர் கூறினார்.