

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) கடந்த ஜூன் 28-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கியது.இந்நிலையில், கடந்த 20-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி சிஜேபி கட்சியினர், ஆதரவாளர்கள் பேரணி சென்றனர். அப்போது, போராட்டக்காரர்கள் - போலீஸார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கூட்டத்தைக் கலைத்தனர். போராட்டக்காரர்களும் போலீஸார், துணை ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்கினர். போலீஸ் வாகனங்களைக் கவிழ்த்து சேதப்படுத்தினர். இதனால் டெல்லியில் பதற்றம் அதிகரித்தது. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்று இளைஞர்கள் கூறியுள்ளனர்.
எதிர்கட்சிகளும் இதே கோரிக்கையை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது என்று மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருந்தார். இதையடுத்து ராகுல் காந்தி கூறியதாவது:
"இளைஞர்களின் எதிர்காலத்தை அதிகம் பாதித்தது நீங்கள்தான்" – மத்திய அரசை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி
"நமது இளைஞர்களின் எதிர்காலத்தை மிகவும் பாதித்தவர் நீங்கள்தான்.நாட்டின் கல்வி அமைப்பு முழுமையாக சீர்குலையவும், சிலரின் கட்டுப்பாட்டுக்குள் செல்லவும் நீங்கள் அனுமதித்ததோடு மட்டுமல்லாமல், அதற்கு ஊக்கமும் அளித்தீர்கள். அதற்கு பொறுப்பான அனைவருக்கும் பாதுகாப்பும் வழங்கினீர்கள்.
மாணவர்களின் கோரிக்கைகள் மிகவும் தெளிவானவை:
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ராகுல் காந்தி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.