

புதுடெல்லி
பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் உத்தரவின் பேரிலே ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி தர்ணாவில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங். எம்.பி. பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்த ராகுல்காந்தி மற்றும் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார், கேரள முதல்-மந்திரி சதீசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த சூழலில் பிரதமர் மோடி இல்லம் அருகே தரையில் படுத்து போராடிய ராகுல் காந்தியை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று பலவந்தமாக கைது செய்ததால் அவருக்கு மூக்கு அருகே காயம், ரத்தக் கசிவு ஏற்பட்டது. காங்கிரஸ் எம்.பி.க்களுக்கும் காயம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியின் உத்தரவின் பேரில், டெல்லி போலீசார் எங்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்களை கோழைத்தனமாக இழுத்துச் சென்றனர். பிரியங்கா காந்தி அவர்களிடமும் கண்ணியமற்ற முறையில் நடந்துகொண்டதுடன், அவரும் வலுக்கட்டாயமாக ஒரு பேருந்தில் ஏற்றப்பட்டார்.
எங்கள் கோரிக்கை தெளிவானது:
• மாணவர்கள் மீதான தடியடியையோ அல்லது அவர்கள் மீது பதியப்படும் வழக்குகளையோ நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.
• தர்மேந்திர பிரதான் தொடர்ந்து பதவியில் நீடிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
• பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி ஆகியோர் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோருவதுடன், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.