ரூ.167 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்த ரவி வர்மாவின் ஓவியம்..!

ராஜா ரவி வர்மாவின் ஓவியமான 'யசோதா மற்றும் குழந்தை கிருஷ்ணா' ஓவியம் ரூ.167.20 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.
ரூ.167 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்த ரவி வர்மாவின் ஓவியம்..!
Published on

மும்பை,

புகழ்பெற்ற இந்திய ஓவியர் ராஜா ரவி வர்மாவின் ஓவியமான 'யசோதா மற்றும் குழந்தை கிருஷ்ணா' ஓவியம் மும்பையில் உள்ள நிறுவனத்தின் ஏலத்தில் ரூ.167.20 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. இதன் மூலம் இந்திய கலை படைப்புகளில் அதிக தொகைக்கு விற்பனையான படைப்பாக இந்த ஓவியம் சாதனை படைத்துள்ளது. இந்த ஓவியத்தில், யசோதா ஒரு பசுவிடம் பால் கறக்க, குழந்தை கிருஷ்ணர் பின்னால் ஒரு பால் கோப்பையுடன் நிற்பது போன்று அமைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஏலத்தில் எம்.எப்.ஹுசை னின் 'கிராம யாத்திரை' என்ற ஓவியம் ரூ.118 கோடிக்கு விற்பனையானதே சாதனையாக இருந்தது. இந்த நிலையில் அந்த சாதனையை ரவி வர்மாவின் ஓவிய விற்பனை முறியடித்துள்ளது. ரவி வர்மாவின் இந்த ஓவியத்தை, சீரம் நிறுவனத்தின் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் பூனாவாலா வாங்கியுள்ளார். 'புகழ்பெற்ற ராஜா ரவி வர்மாவின் யசோதை மற்றும் கிருஷ்ணர் ஓவியத்தை பாதுகாத்து, பராமரிக்கும் வாய்ப்பு கிடைத்ததை நான் ஒரு பாக்கியமாக கருதுகிறேன்' என்று பூனாவாலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏல நிறுவன தலைவர் மினல் வஜிராணி கூறும்போது, "ஓவியரின் கலைப்பயணம் உச்சத்தில் இருந்த 1890-களில் வரையப்பட்ட இந்த படைப்பு, குழந்தை வடிவ கிருஷ்ண பகவானையும், அவரது வளர்ப்பு தாயான யசோதாவையும் மையமாக கொண்டு, தாய்மையின் அன்பை மிக நுணுக்கமான முறையில் சித்தரிக்கிறது. இக்காட்சி பார்வையாளர்களை தன்வயப்படுத்தி, ஒரு சாதாரண இல்லற தருணத்தை, ஒரு பரந்த மற்றும் புனிதமான புராண நிகழ்வில் பங்கேற்பது போன்ற ஓர் அனுபவமாக உருமாற்றுகிறது.

ராஜா ரவி வர்மாவின் படைப்புகளிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், உணர்வுகளை தூண்டக் கூடியதாகவும் அமைந்த படைப்புகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. சிறந்த கலைப் படைப்புகள், தங்கள் காலத்தால் அழியாத மதிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் தனித்துவமான இயல்பைக் கொண்டுள்ளன. ரூ.80 முதல் ரூ.120 கோடி வரை ஏலம் போகும் என எதிர்பார்த்த நிலையில் ரூ.167 கோடியை தாண்டி இந்த ஓவியம் ஏலம் போயுள்ளது. ராஜா ரவி வர்மாவின் கலைப்படைப்பு சாதனை அளவிலான விலைக்கு விற்பனையானது கலை சந்தையின் வலிமையை அடிக்கோடிட்டு காட்டுகிறது. மேலும் இந்திய கலை வரலாற்றிலேயே அதிக மதிப்புக்கு விற்பனையான சாதனை படைப்பு என்ற புதிய அளவு கோலையும் நிர்ணயித்துள்ளது" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com