

ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலத்தில் போலீசார் இனி அதிகாரப்பூர்வ பதிவுகள் மற்றும் வாய்மொழித் தொடர்புகளில் ‘தலித்’ (Dalit) என்ற வார்த்தையை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ‘பட்டியல் சாதி’ (Scheduled Caste) என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும் என ராஜஸ்தான் காவல்துறை தனது அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, அதிகாரப்பூர்வ அரசுத் தொடர்புகளின்போது ‘தலித்’ என்ற வார்த்தையைப் பேசவோ அல்லது எழுதவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், முதல் தகவல் அறிக்கைகள் (FIR), புகார்கள், குற்றப்பத்திரிகைகள், கைது குறிப்புகள், காவலில் வைப்பது தொடர்பான ஆவணங்கள், வழக்கு நாட்குறிப்புகள், வழக்கு முடிப்பு அறிக்கைகள், படிவங்கள், விண்ணப்பங்கள், சான்றிதழ்கள் மற்றும் அதிகாரப்பூர்வ கடிதப் பரிமாற்றங்கள் ஆகியவற்றில் காவல்துறை இனி ‘தலித்’ என்ற சொல் பயன்படுத்தப்படாது.
இந்த உத்தரவு அனைத்துக் காவல்துறைத் தலைமை இயக்குநர்கள் (DGP), காவல் ஆணையர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் (SP) மற்றும் அவர்களின் துணை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ராஜஸ்தான் முழுவதும் உள்ள காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளும்(SHOs) இந்த உத்தரவைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.