நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி

வினாத்தாள் கசிவு குறித்து கோர்ட்டு எழுப்பிய கேள்விகளுக்கு சுருக்கமான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
NEET Exam, NEET Issue, Supreme Court
Published on

புதுடெல்லி,

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. அதன் முடிவுகள், கடந்த மாதம் 4-ம் தேதி வெளியிடப்பட்டன.

நீட் தேர்வில் 1.563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிவு. வினாத்தாள் விற்பனை. 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது போன்ற முறைகேடுகளும் நடந்ததாக பேசப்பட்டது. எனவே, நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள், பெற்றோர் என பலதரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.

இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான 38 மனுக்களும். சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீட் தேர்வு வினாத்தாள் செல்போன் மூலம் கசிந்துள்ளது. பள்ளிகளில் பிரிண்டர்களில் பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மே 4ம் தேதி டெலிகிராம் சேனலில் நீட் வினாத்தாள், அதன் விடைகளுடனான வீடியோ வெளியிடப்பட்டது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பேசிய நீதிபதி மத்திய அரசிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

அவர் எழுப்பிய கேள்விகள்:-

* சிபிஐ விசாரணைக்கு பிறகு எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?

* நீட் தேர்வின் ஒட்டுமொத்த நடைமுறைகளையும் அறிய விரும்புகிறோம்

* நீட் வினாத்தாள் கசிவு இல்லை என்பது தேசிய தேர்வு முகமையின் நிலைப்பாடு

* நீட் தேர்வு முறைகேடுகளை கண்டறிய சைபர் குற்ற தடயவியல் தரவு ஆய்வை கொண்டு அறிய முடியாதா?

* நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்களை மட்டும் கண்டறிந்தால் அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தலாமா

* நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை ஒப்புக்கொள்கிறீர்களா?

இந்த கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க ஒரு நாள் அவகாசம் எடுத்துக் கொள்ளட்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த மத்திய அரசு, நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை ஒப்புக்கொண்டது. ஒரு இடத்தில் மட்டும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வினாத்தாள் கசிவால் பலனடைந்த மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

மேலும் வெளிநாட்டில் தேர்வெழுதுவோருக்கு நீட் வினாத்தாள் எப்படி அனுப்பி வைக்கப்படுகிறது என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மத்திய அரசு, தூதரகங்கள் வாயிலாக நீட் வினாத்தாள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என பதில் அளித்தது. சமூக உடகங்களில் நீட் வினாத்தாள் கசிந்தது உண்மை என்றால் அது மிகப்பெரியதாக இருக்க வாய்ப்பு உள்ளது என நீதிபதி கூறினார்.

தொடர்ந்து நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்பிக்க மத்திய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கை வியாழக்கிழமைக்கு (அதாவது 11-ம் தேதிக்கு) ஒத்திவைத்தார். மேலும் வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ, தேசிய தேர்வு முகமை வரும் 10ம் தேதிக்குள் பதிலை தாக்கல் செய்ய வேண்டும். இதில் தவறிழைத்தவர்கள் கண்டறியப்பட்டால் 23 லட்சம் மாணவர்களுக்கு மறுதேர்வு தேவையில்லை. ஆனால் தவறிழைத்தவர்கள் கண்டறியப்படாவிடில் மறுதேர்வு நடத்தப்படும் என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com