

மும்பை,
அயோத்தி ராமர் கோவில் உண்டியல் திருட்டு விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நவநிர்மாண் சேனா கட்சித்தலைவர் ராஜ்தாக்கரே சமீபத்தில் பேசும்போது. “மும்பை சித்தி விநாயகர் கோவில் உண்டியல் காணிக்கை பணத்தில் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 கோடி வரை முறைகேடு செய்யப்படுகிறது” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் மராட்டியத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
இதனை தொடர்ந்து, சித்தி விநாயகர் கோவில் அறக்கட்டளை தலைவரும், சிவசேனா நிர்வாகியுமான சதா சர்வன்கர் நடத்திய விசாரணையை தொடர்ந்து, கோவில் பணத்தை திருடியதாக ஊழியர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில், சித்தி விநாயகர் கோவில் அறக்கட்டளை குழுவினர் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை நேரில் சந்தித்து, கடந்த 2023-ம் முதல் 2026-ம் ஆண்டு வரையிலான கோவில் காணிக்கை வசூல் விவரங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தனர்.
இதனை தொடர்ந்து, இந்த முறைகேடு புகாரின் பின்னணியில் உள்ள முழு உண்மையை கண்டறிய. கடந்த 5 ஆண்டு கால கோவில் கணக்கு பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை விரிவாக ஆய்வு செய்து விசாரணை நடத்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், இந்த விசாரணை அறிக்கையை மிக விரைவில் தாக்கல் செய்யவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.