

திருவனந்தபுரம்,
கேரளாவில் தங்கக்கடத்தல் வழக்கை விசாரிக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு எதிராக பொய் வாக்குமூலம் அளிக்க முக்கிய குற்றவாளி சொப்னா சுரேஷை வற்புறுத்தியதாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கேரள சட்டசபை தேர்தலையொட்டி பிரசாரம் செய்ய மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாக்குர் நேற்று திருவனந்தபுரத்துக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட நபர்களால் பதிலளிக்க முடியவில்லை. எனவே, விசாரணையை தடுக்க போலீசாரை ஏவி உள்ளனர். இதுதொடர்பாக போலீசுக்கு உத்தரவிட்டது யார்? இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும். வருங்காலத்தில் இன்னும் நிறைய ஊழல் வழக்குகள் வரும் என்று மந்திரிகளும், உயர் அதிகாரிகளும் பயப்படுகிறார்களா? என்று அவர் கூறினார்.