

சென்னை,
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார்.
நடிகர் விவேக்கின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் விவேக் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தின் மீதான அக்கறையை தனது திரைப்படங்களில் பிரதிபலித்தவர் நடிகர் விவேக் என்று பிரதமர் மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், பிரபல நடிகர் விவேக்கின் அகால மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் விவேக்கின் நகைச்சுவை மற்றும் அறிவுப்பூர்வமான வசனங்கள் மக்களை மகிழ்வித்தன. அவர் சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தின் மீதான அக்கறையை தனது திரைப்படங்களில் பிரதிபலித்தார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அபிமானிகளுக்கும் எனது இரங்கல். ஓம் சாந்தி என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.