

சிக்கமகளூரு,
கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரு (மாவட்டம்) தாலுகா பேக தல்லி கிராமத்தை சேர்ந்தவர் மனு (26 வயது). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி ஓராண்டாகிறது. திருமணமான முதல் சில மாதங்கள் மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக அவரது மனைவியின் நடவடிக்கையில் மனுவுக்கு சந்தேகம் எழுந்தது.
அவரை தொடர்ந்து கண்காணித்ததில் அவருக்கு, அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு இருப்பது பற்றி தெரியவந்தது. இதுகுறித்து அவர் தனது மனைவியிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக முற்றியது. மனு கள்ளக்காதலை கைவிடுமாறு மனைவியை கண்டித்தார். ஆனாலும் அவரது பேச்சை கேட்காமல் அவர் கள்ளக்காதலை தொடர்ந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் மனைவி இல்லாததை பார்த்த அவர் அப்பகுதியில் தேடினார். அப்போது அவரது மனைவி கள்ளக்காதலனின் வீட்டில் இருப்பது பற்றி அறிந்த மனு அங்கு சென்று மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அவர் வர மறுத்துள்ளார். இதனால் மனம் உடைந்த மனு நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சிக்கமகளூரு புறநகர் போலீசார், மனுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, புறநகர் போலீசாரிடம் மனுவின் பெற்றோர் தனது மகனின் தற்கொலைக்கு காரணம் அவரது மனைவி கள்ளக்காதலை கைவிடாதது தான் என புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.