சார்ஜா,
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள 46-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் டி காக் களமிறங்கினர். ரோகித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். டி காக் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 26 பந்துகளில் 33 ரன்களுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த பொல்லார்டும் 6 ரன்களில் வெளியேற மும்பை அணி 14.1 ஓவரில் 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த பாண்ட்யா சகோதரர்கள் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். டெல்லி அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.
டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல் மற்றும் ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடி வருகிறது.