பிரதமர் மோடி குறித்த இம்ரான்கான் பேச்சுக்கு பாகிஸ்தான் அரசு விளக்கம்

பிரதமர் மோடி குறித்து இம்ரான்கான் பேசிய கருத்து வேறு விதமாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி குறித்த இம்ரான்கான் பேச்சுக்கு பாகிஸ்தான் அரசு விளக்கம்
Published on

இஸ்லமாபாத்,

மோடி மீண்டும் ஆட்சி அமைத்தால், இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதி பேச்சுவார்த்தை தொடர வாய்ப்பு இருப்பதாக இம்ரான்கான் பேசியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின. அவரது இந்தக் கருத்தை முன்வைத்து பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன. அதேபோல், பாகிஸ்தானிலும் இம்ரான் கருத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்தன.

இந்த நிலையில், இம்ரான்கான் கருத்துக்கு பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்திய பொதுத்தேர்தல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சொல்ல வந்த கருத்து வேறு விதமாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும், யார் தோல்வியடைய வேண்டும் என்பதை இந்திய மக்களே தீர்மானிப்பார்கள் என்றும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது குரேஷி இதுதொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய ஊடகங்கள் அனைத்து விஷயங்களையும் பதற்றத்துக்குரியவையாக மாற்றி விடுகின்றன. பிரதமரின் கருத்தானது, அவர் சொன்னதைத் தாண்டி வேறொரு முறையில் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மோடி குறித்து பிரதமர் இம்ரானுக்கு என்ன கருத்து இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.இந்தியத் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை அந்நாட்டு மக்கள் மட்டுமே தீர்மானிப்பார்கள் இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com