புதுடெல்லி,
நமது நாட்டின் முன்னாள் பிரதமரும் சுதந்திர போராட்ட வீரருமான லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஜி அவர்களுக்கு எனது மரியாதையை உரித்தாக்குகிறேன். அன்னாருடைய வாழ்வின் மதிப்புகள் மற்றும் கொள்கைகள் நாட்டு மக்கள் அனைவருக்கும் உத்வேகத்தை தரும் எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக காந்தி நினைவிடத்திலும் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
லால் பகதூர் சாஸ்திரி அக்டோபர் 2, 1904ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் முகல்சாராய் மாவட்டத்தில் பிறந்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் அவர் போக்குவரத்து மற்றும் காவல்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
1964ம் ஆண்டு பாரத பிரதமராக பொறுப்பேற்றார்.
1965ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரை வெற்றிகரமாக வழி நடத்தினார்.
ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்னும் முழக்கத்தை நாடு முழுவதும் ஒலிக்கச் செய்த பெருமைக்குரியவர்.
ஜனவரி 11, 1966ம் ஆண்டு டஷ்கெண்ட்டில் வைத்து மாரடைப்பால் தன் இன்னுயிர் துறந்தார்.
முன்னதாக பிரதமர் மோடி, லால் பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட பல தலைவர்கள் டெல்லி விஜய்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.