கவர்னருடனான சந்திப்பு நிறைவு: விஜய் முதல்-அமைச்சர் ஆவாரா..?எதிர்பார்ப்பில் தமிழகம்

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும்நிலையில், கவர்னர் - விஜய் இடையேயான சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது.
கவர்னருடனான சந்திப்பு நிறைவு: விஜய் முதல்-அமைச்சர் ஆவாரா..?எதிர்பார்ப்பில் தமிழகம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ள நிலையில், தற்போதுள்ள தவெகவின் பலம் 112 ஆக உள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் தவெகவுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை.

முன்னதாக, தவெக தலைவர் விஜய், நேற்று மாலை கவர்னர் அர்லேகரை சந்தித்தார். அப்போது தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி கவர்னரிடம் கடிதம் வழங்கினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் விஜய்க்கு இல்லாததால், அவரை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைக்கவில்லை.

இந்த பரபரப்பான சூழலில், தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் கவர்னரை சந்தித்தார். இதற்காக விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து கிண்டி, கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு சென்று கவர்னரை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது, தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என கவர்னரிடம் விஜய் கோரிக்கை வைத்துள்ளார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் எனவும் கவர்னரிடம் விஜய் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக கூறப்பட்டது.

அப்போது, 112 எம்.எல்.ஏ.,க்களை வைத்துள்ள நீங்கள் எப்படி பெரும்பான்மையை நிரூபிப்பீர்கள்? உங்களுக்கு யார் ஆதரவு அளிப்பார்கள் என்பது உள்ளிட்ட சில கேள்விகளை கவர்னர் அர்லேகர் விஜய்யிடம் கேட்டுள்ளார். இதையடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என விஜய்க்கு கவர்னர் அறிவுறுத்தியுள்ளார். இதன் பின்னர் விஜய் கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டுச் சென்றார். கவர்னர் - விஜய் இடையேயான சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது.

விஜய்யுடனான சந்திப்புக்கு பிறகு கவர்னர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என தமிழகமே உற்று நோக்கி வருகிறது. விஜய் முதல்-அமைச்சராவதற்கு இருந்த சிக்கல் தீர்ந்ததா.? எனவும் கேள்வி எழுந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com