

மீன்சுருட்டி,
ராஜராஜ சோழனின் மகனான மாமன்னன் ராஜேந்திர சோழன் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு அரண்மனை அமைத்து ஆட்சி செய்தார். கங்கைகொண்ட சோழபுரத்தில் அவரால் பிரகன் நாயகி உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு, தமிழர்களின் கலாசாரம் பண்பாடு ஆகியவற்றை அறிந்து கொள்ளும் பொக்கிஷமாக இன்றளவும் விளங்கி வருகிறது.
இந்த கோவிலில் மாமன்னன் ராஜேந்திரசோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரையை முன்னிட்டு பெருவிழா மற்றும் தமிழ்ப் பண்பாட்டு பெருவிழா கடந்த 29-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 2-ம் நாளான நேற்று முன்தினம் இரவு ராஜேந்திர சோழன் உருவப்படம் திறப்பு விழா, ஆயிரம் வருடங்களுக்கு முன் தமிழர்களின் கலாசார பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் பறை, ஒயிலாட்டம், பரத நாட்டியம், மண் மேளம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.
உருவப்படத்திற்கு மரியாதை
இந்த நிகழ்ச்சிகளுக்கு கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுவின் தலைவராக உள்ள பொறியாளர் கோமகன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உடையார்பாளையம் ஜமீனின் வாரிசான ராஜ்குமார் கலந்துகொண்டு ராஜேந்திர சோழனின் உருவப்படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பறை, ஒயிலாட்டம், பரத நாட்டியம், மண் மேளம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பேராசிரியர்கள் தியாகராஜன், ராஜராஜன், புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக முடிகொண்டான் தமிழ் சங்க தலைவர் இளவரசன் வரவேற்றார். முடிவில் ராமநாதன் நன்றி கூறினார்.