

பாசிப்பருப்பு - ½ கப்
வெல்லம் - 1½ கப்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
ரவை - ¼ கப்
தேங்காய் - ¼ கப் (துருவியது)
ஏலக்காய் பொடி - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு
செட்டிநாடு பாரம்பரிய இனிப்பான உக்காரையை 3 பிரிவாக பிரித்து செய்யப்போகிறோம்.
முதலில், கியாஸ் அடுப்பை 'ஆன்' செய்து, வாய் அகன்ற பாத்திரம் ஒன்றை வைக்கவும். பாத்திரம் சூடாகியதும் அதில் பாசிப்பருப்பை தட்டி லேசாக வறுக்கவும். பின்னர், அதை தண்ணீரில் கழுவி அதே பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் 1½ கப் தண்ணீரை ஊற்றி வேகவிடவும். குக்கரில் வேகவைக்க விரும்பினால், ஒரு விசில் போதும். பாசிப்பருப்பு நன்கு வெந்துவிடும்.
அடுத்து வெல்லப்பாகு தயாரிக்க வேண்டும். அதற்கு அடுப்பில் வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை எடுத்துக்கொள்ளவும். அத்துடன் ½ கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். வெல்லம் கரைந்தால் மட்டும் போதும், கம்பி பதம் தேவையில்லை. வெல்லப்பாகு ரெடி.
அடுத்து வாய் அகன்ற பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்கவும். நெய் சூடாகியதும் முந்திரி பருப்பை சேர்த்து வறுக்கவும். பொன் நிறமாக மாறியதும் வெளியே எடுத்து வைக்கவும். அதன்பிறகு, நெய்யுடன் கடலை எண்ணெய் சேர்க்கவும். இரண்டும் சேர்ந்த கலவை நன்கு சூடாகியதும், அத்துடன் ரவையை சேர்க்கவும். அந்த நேரத்தில், அடுப்பில் தீயை குறைத்துக்கொள்ளவும். ரவை பொறிந்து வரும். அத்துடன், துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
அடுத்து, வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து மீண்டும் கிளறவும். தொடர்ந்து, வெல்லப்பாகை வடிகட்டி ஊற்றி கிளறவும். முதலில் தண்ணீராக இருப்பதுபோல் தெரியும். தொடர்ந்து கிண்டினால் கெட்டியான பதத்திற்கு வரத்தொடங்கும். அப்போது 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து மீண்டும் கிளறிவிடவும். அத்துடன், ஏலக்காய் பொடி, வறுத்து வைத்த முந்திரி ஆகியவற்றை சேர்த்து கிளறினால், தித்திப்பான உக்காரை ரெடி.