

தேவையான பொருட்கள்
சிக்கன் - ¾ கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - ½ டீஸ்பூன்
சீரகப்பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மல்லிப்பொடி - 2 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மல்லி இலை - சிறிதளவு
செய்முறை
முதலில் 'கியாஸ்' அடுப்பை 'ஆன்' செய்து, அதில் வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை வைக்கவும். நல்லெண்ணெயை ஊற்றி, அது சூடாகியதும், பட்டை, கிராம்பு, ஏலக்காயை சேர்க்கவும். தொடர்ந்து, வெட்டி வைத்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். சிறிதளவு உப்பையும் சேர்த்துக்கொள்ளவும்.
வெங்காயம் பொன் நிறமாக வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் பொடி, சீரகப்பொடி, கரம் மசாலாப்பொடி, மல்லிப்பொடி, மிளகாய் பொடி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து விடவும். அடுத்து, பொடியாக வெட்டி வைத்த தக்காளியை சேர்த்து, நன்கு வேகும் வரை வதக்கவும். தக்காளி வெந்தவுடன் வெட்டிவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும். தேவையான அளவு உப்பை சேர்த்துக்கொள்ளவும்.
சிறிதளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வேகவிடவும். அடி பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறிவிடவும். 20 நிமிடங்களில் சிக்கன் துண்டுகள் நன்றாக வெந்து, மசாலாவுடன் சேர்ந்துவிடும். நிறைவாக, மல்லி இலையை தூவி இறக்கவும். சுவையான, மணமான சிக்கன் கிரேவி ரெடி. சாப்பாடு, இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சரியான சைடு டிஸ்.