புதுடெல்லி,
வங்கிகள் இணைப்பு, சீர்திருத்த நடவடிக்கைகளை கைவிட வேண்டும், கடன்களை மீட்டெடுப்பதை உறுதி செய்ய வேண்டும், கடனை திருப்பி செலுத்த தவறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், வங்கி டெபாசிட்களுக்கு வட்டியை உயர்த்த வேண்டும், வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கக்கூடாது, சேவைக்கட்டணத்தை அதிகரிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், வங்கி ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி அலுவலர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு உள்பட 9 சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றன. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இதில் கலந்து கொண்டனர்.
போராட்டம் குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:-
வங்கிகளை இணைப்பது, தனியார்மயமாக்குவது, பெரும் முதலாளிகளின் வராக்கடனை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்காதது போன்ற தவறான பாதைகளில் மத்திய அரசு நடந்து கொண்டிருக்கிறது. எங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டு இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.