சாலைகளில் தேங்கி கிடக்கும், மழைநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் - அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

சாலைகளில் தேங்கி கிடக்கும் மழைநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலைகளில் தேங்கி கிடக்கும், மழைநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் - அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
Published on

தொண்டி,

திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள முகிழ்தகம் ஊராட்சியை சேர்ந்தது சம்பை கிராமம். இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள நான்கு வீதிகளில் உள்ள சிமெண்டு சாலைகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.

இதனால் அப்பகுதியில் பொதுமக்கள், குழந்தைகள், முதியோர் என அனைத்து தரப்பினரும் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இங்குள்ள சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீர் அசுத்தமாகி தற்போது சுகாதார்கேடுகளை விளைவித்து வருகிறது. தினமும் பள்ளி குழந்தைகள் இந்த சாலைகளில் தேங்கிக்கிடைக்கும் தண்ணீரில் தான் நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இந்த தண்ணீரை அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், சுகாதாரத்துறையினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விட்டு சென்றனர். ஆனால் தேங்கி கிடக்கும் தண்ணீரை இதுநாள்வரை அப்புறப்படுத்தவில்லை. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் இருந்துவருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக சம்பை கிராமத்தில் சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com