லோக் ஆயுக்தா வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு - விசாரணை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

லோக் ஆயுக்தா வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்த வழக்கின் விசாரணையை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
Published on

புதுடெல்லி,

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தேவதாஸ், உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் மற்றும் ஆறுமுகம் ஆகியோரை தமிழக அரசு நியமித்தது.

இதில் ராஜாராம், ஆறுமுகம் ஆகியோரின் நியமனத்தில் விதிகள் பின்பற்றப்படவில்லை எனக்கூறி கரூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, அவர்கள் இருவரின் நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்தது.

இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த மாதம் 29-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு விதித்த இடைக்கால தடையை நீக்க முடியாது என்று கூறியது. அத்துடன், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு எதிர்மனுதாரர் ராஜேந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி, எதிர்மனுதாரர் ராஜேந்திரன் தரப்பில் மூத்த வக்கீல் சிராஜூதீன் ஆகியோர் ஆஜரானார்கள். விசாரணை தொடங்கியதும் இதில் அவசரம் எதுவும் இல்லை என்று கூறிய நீதிபதிகள், வழக்கை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com