சென்னையில் விரைவில் 100 மின்சார பஸ்கள்: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்


சென்னையில் விரைவில் 100 மின்சார பஸ்கள்: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 20 April 2025 9:32 AM IST (Updated: 20 April 2025 1:07 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இந்த ஆண்டு இறுதிக்குள் 625 மின்சார பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் 630 வழித்தடங்களில் 3,200 பஸ்களை இயக்கி வருகிறது. அதில் தினமும் 32 லட்சம் பேர் வரை பயணம் மேற்கொள்கின்றனர். மேலும் நகரின் போக்குவரத்து தேவை அதிகரிப்பதாலும், காலாவதியாகும் பஸ்களை மாற்ற வேண்டும் என்பதாலும் தேவைக்கு ஏற்ப புதிய பஸ்கள் வாங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் புதிய மாநகர் மற்றும் புறநகர் பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. தற்போது சென்னை உட்பட பல்வேறு மாநகரங்களில் புதிதாக வாங்கப்பட்ட தாழ்தள பஸ்கள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் கால நிலைக்கு ஏற்ப சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் நகர்ப்புறங்களின் போக்குவரத்து பயன்பாட்டுக்கு நவீன வடிவமைப்புடன் கூடிய மின்சார பஸ்கள் வாங்கப்படும் என அரசு தெரிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன், கடந்த 2023ம் ஆண்டு 500 மின்சார பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டது.மேலும் கடந்த ஆண்டு மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு 12 மீட்டர் நீளமுள்ள 500 தாழ்தள மின்சார பஸ்கள் வாங்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரப்பட்டது. மேலும் மாநகர போக்குவரத்து கழகத்திற்கு இரண்டாவது கட்டமாக மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 600 மின்சார தாழ்தள பஸ்கள் வாங்க கடந்த பிப்ரவரி மாதம் டெண்டர் கோரியது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் பயன்பாட்டிற்கு வரவுள்ள பஸ்களை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பஸ்கள் தயாரான நிலையில் அவற்றை இயக்குவதற்கான கட்டமைப்புகளை நிறைவு செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் அந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு ஜூன் மாதம் முதல் 100 மின்சார தாழ்தள பஸ்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

இதுகுறித்து மாநகர் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, பல்லவன் இல்லம், தண்டையார்பேட்டை ஆகிய 5 பேருந்து பணிமனைகளில் இருந்து பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மின்சாரப் பஸ்களுக்கான சார்ஜர் வசதி உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் 5 பணிமனைகளில் முழு வீச்சல் நடைபெற்று வருகிறது. தாழ்தள பஸ்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதால் மாற்றுத் திறனாளிகள், சிறியவர்கள் முதல் முதியவர்கள் என அனைவராலும் சுலபமாக ஏறி-இறங்கும் வகையில் இந்த பஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் ஜூன் மாதம் முதற்கட்டமாக 100 மின்சார பஸ்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. சென்னையில் இந்த ஆண்டு இறுதிக்குள் 625 மின்சாரப் பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

1 More update

Next Story