

சென்னை,
அ.தி.மு.க.வின் 134 எம்.எல்.ஏ.க்களில் முதல்அமைச்சர் எடப் பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 113 பேரும், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக 21 எம்.எல். ஏ.க்களும் உள்ளனர். இந்த 21 எம்.எல்.ஏ.க்களில் 19 பேர் கடந்த மாதம் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் எனவே அவருக்கு கொடுக்கும் ஆதரவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக கடிதம் கொடுத்தனர்.
இது கட்சிக்கு எதிரான செயல் என்றும் எனவே 19 எம்.எல்.ஏ.க்கள் மீதும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சபாநாயகர் தனபா லிடம் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் பரிந் துரை செய்தார். இதை ஏற்று 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீசு அனுப்பி சபாநாயகர் விளக்கம் கேட்டார்.
அப்போது கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையன் மட்டும் டி.டி.வி.தினகரன் அணியில் இருந்து பிரிந்து மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தார். மற்ற 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி இழப்பு செய்து நேற்று முன்தினம் சபாநாயகர் அதிரடி நடவடிக்கை எடுத் தார். இது தமிழக அரசிதழிலும் அன்றே உடனடியாக வெளியிடப்பட்டது.
18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பது பற்றி தேர்தல் ஆணையத்துக்கும் அதிகாரப்பூர்வமாக தெரி விக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூ பிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இந்த வழக்குடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேரின் மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி துரைசாமி அறிவித்துள்ளார்.
அதன்படி இன்று 18 எம்.எல்.ஏ.க்களின் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் சல்மான் குர்ஷித் ,துஷ்யந்த் தவே, சபாநாயகர் தரப்பில் அரிமா சுந்தரம் ஆகியோர் ஆஜரானார்கள். இருதரப்பு சார்பிலும் வாதம் நடைபெற்று வருகிறது.
தினகரன் தரப்பில் தாங்கள் கட்சி தாவல் தடை சட்டத்தை மீறவில்லை என வக்கீல் துஷ்யந்த் தவே வாதிட்டார். தமிழக அரசில் ஊழல் மலிந்து விட்டதால் முதல்-அமைச்சர் மீதான ஆதரவை திரும்ப பெற்றோம். சபாநாயகரின் நடவடிக்கை நீதிக்கு எதிரானது. பதவி காலம் முடிய 4 ஆண்டுகள் உள்ள நிலையில் தகுதி நீக்க நடவடிக்கை சரியானது இல்லை. சபாநாயகர் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என வாதிடப்பட்டது.
பிப்ரவரியில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு வாக்களித்தோம். எம்.எல்.ஏக்கள் வேறு எந்த கட்சிக்கும் செல்லவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறவே எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யபட்டு உள்ளனர். பன்னீர்செல்வம் அணியினர் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது, அது தொடர்பாக எந்த நோட்டீசும் இல்லை. கொறடா உத்தரவை மீறிய பன்னீர்செல்வம் தரப்பினருக்கு அமைச்சர் பதவி கொடுத்தது ஏன்? எடியூரப்பா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்த வழக்கிற்கும் பொருந்தும். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் சிலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என வாதிடபட்டது.
மாநில அரசியலில், மத்திய அரசு தலையிடுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது .சபாநாயகர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக அவர் உத்தரவு பிறப்பிக்க முடியாது. அடிப்படை உறுப்பினராக நீடிக்கும் பட்சத்தில் கொறாடா உத்தரவால் எங்களை எப்படி நீக்க முடியும். தமிழக அரசை சிலர் டெல்லியில் இருந்து இயக்குகிறார்கள். முதலமைச்சருக்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே தகுதி நீக்கம் செய்ய முடியும் .தகுதி நீக்கம் தொடர்பான ஆவணங்களை எங்களிடம் அளிக்கவில்லை. காலியாக இருக்கும் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கமால் இருக்க உத்தரவு தேவை . தகுதி நீக்கம் நேரில் தரப்படவில்லை. இனையதளத்தில் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.என வாதிடப்பட்டது.
சபாநாயகர் தரப்பில் வக்கீல் அரிமா சுந்தரம் வாதிட்டார். வழக்கிற்கு தேவையில்லாத வாதம் முன் வைக்கப்படுகிறது. நீதிமன்றத்தில் மத்திய அரசை குறை கூறக்கூடாது. சபாநாயகர் குறித்து கண்மூடித்தனமாக குற்றச்சாட்டுகளை வைப்பது கண்டனத்திற்குரியது. அரசு, சபாநாயகர் மீது குற்றசாட்டுகளை வைப்பதால் விளக்கம் அளிக்க கூடுதல் அவகாசம் தேவை. பதில் அளிக்க 10 நாட்கள் கால அவகாசம் தேவை. அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கபடாது.பெரும்பான்மையை நிரூபிக்க போடப்பட்டுள்ள தடையை தேவைப்பட்டால் நீட்டிக்கலாம் என வாதிட்டார்.
பெரும்பான்மையை நிரூபிப்பது குறித்து முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து எந்த தகவலும் இல்லை என கவர்னர் தரப்பில் வாதம் முன்வைக்கபட்டது.
பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்க கோரிய வழக்கில் திமுக தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல்வாதிட்டார். இந்த வழக்கில் அடுத்த உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என உத்தரவிட்டது. வழக்கு முடியும் வரை 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்கவும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் பேரவைச்செயலாளர், முதலமைச்சர்,அரசு கொறடா பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உள்ளது.