டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு தொடங்கியது

FILEPIC
சென்னையில் மட்டும் 170 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
சென்னை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் சப்-கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்பட 70 காலியிடங்களை நிரப்ப குரூப்-1 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது.
இந்த பதவிகளுக்கு 2 லட்சத்து 27 ஆயிரத்து 982 பேர், குரூப்-1 ஏ பதவிக்கு 6 ஆயிரத்து 465 பேர், குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ பதவிக்கு 14 ஆயிரத்து 849 பேர் என மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த நிலையில், குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ முதல்நிலை போட்டித்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும், கூடுதலாக 6 தாலுகாக்களிலும் என மொத்தம் 44 இடங்களில் குரூப் 1, குரூப் 1ஏ முதல்நிலை தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு கண்காணிப்பு பணியில் 987 பேர் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் சென்னையில் மட்டும் 170 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
12.30 மணிக்கு முன்னர் தேர்வறையில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு உள்ளே செல்போன் மற்றும் மின்னணு கடிகாரம், புளூடூத் போன்ற மின்னணு உபயோகப்பொருட்கள் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






