த.வெ.க. அரசில் அமைச்சர்களாக வன்னி அரசு, ஷாஜகான் பதவியேற்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ஷாஜகான், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னிஅரசு ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
த.வெ.க. அரசில் அமைச்சர்களாக வன்னி அரசு, ஷாஜகான் பதவியேற்பு
Published on

சென்னை,

த.வெ.க. அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்னியரசு எம்.எல்.ஏ. இடம்பெறுவார் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று இரவு அறிவித்தார். இதுதொடர்பாக சென்னை வேளச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "த.வெ.க.வுக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு கொடுக்க முடிவு எடுத்தோம். அதன் அடிப்படை யில் வெளியில் இருந்து ஆதரவு என கடிதத்தில் தெரிவித்தோம். ஆனால் அமைச்சரவை யில் இடம்பெற வேண்டும் என கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். த.வெ.க. தரப்பில் இருந்து அமைச்சரவையில் இடம்பெற வெளிப்படையாக அழைப்பு வந்தது. தமிழகத்தில் முதன் முறையாக கூட்டணி ஆட்சி அறிமுகமாகிறது. தி.மு.க.வுடனான கூட்டணியில் இடம்பெறுகிறோமா? இல்லையா? என்பதை நாளை (அதாவது இன்று) தெரிவிக்கிறேன்” என்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர், தேசிய செயலாளரும் எம்.பி.யுமான நவாஸ் கனி ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்து பேசினார்கள். அப்போது, த.வெ.க. அமைச்சரவையில் தங்கள் கட்சி பங்கேற்பதற்கான கடிதத்தை வழங்கினர்.

அதன்படி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அமைச்சராக பதவியேற்க பாபநாசம் எம்.எல்.ஏ. ஷாஜகான் தேர்வு செய்யப்பட்டு உள்ளதற்கான கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர். அப்போது விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடன் இருந்தார்.

இது குறித்து, அந்த கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் நல்லாட்சி செய்வதற்கும், முந்தைய ஆட்சி செய்த நல்ல திட்டங்கள் தொடர்வதற்கும் விஜய் தலைமையிலான ஆட்சி நல்லாட்சியாக அமைய வேண்டும் என்று நாங்கள் முடிவு எடுத்துள்ளோம். இதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தேர்தல் கால முடிவு அல்ல. ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பது தொடர்பான முடிவு. ஆட்சியில் இருந்து கொண்டு தி.மு.க. நடத்தும் போராட்டங்களில் பங்கேற்க மாட்டோம். ஆட்சியில் குறைகள் இருந்தால் நாங்கள் தட்டிக் கேட்போம்” என்று கூறினார்.

எனவே கவர்னர் மாளிகையில் இந்த 2 அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ஷாஜகான், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசும் அமைச்சர்களாக பதவியேற்கிறார்கள்.

இந்த சூழலில் இன்று காலை 9.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்க உள்ளதாக கவர்னர் மாளிகை சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. முதல்-அமைச்சர் விஜய்யின் பரிந்துரைக்கு கவர்னர் அர்லேகர் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ஷாஜகான், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னிஅரசு ஆகியோர் த.வெ.க. அரசில் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கு கவர்னர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் புதிய அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலத்துறையும், வன்னி அரசுக்கு சமூக நீதித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com