

சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 18-02-26 அன்று மீன்பிடிக்கச் சென்ற 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ள செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வழக்கம் போலத் திராவிட மாடல் முதல்-அமைச்சர் ஸ்டாலின், இந்திய ஒன்றிய அரசிற்கு கடிதம் மட்டுமே எழுதி தம்முடைய கடமையை முடித்துக்கொண்டது வன்மையான கண்டனத்துக்குரியது.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இலங்கை கடற்படையால் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு 74 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 2021-ம் ஆண்டு 143 மீனவர்களும், 2022-ம் ஆண்டு 229 மீனவர்களும், 2023-ம் ஆண்டு 220 மீனவர்களும், 2024-ம் ஆண்டு 528 மீனவர்களும், 2025-ம் ஆண்டில் 90 மீனவர்களும், நடப்பு 2026-ம் ஆண்டில் தற்போது வரை 30-க்கும் மேற்பட்ட மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக ஆட்சி அமைந்த கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் மொத்தமாக 1,300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது, மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்கவே முடியாத அளவிற்கு அவர்களது வாழ்வினை அழித்தொழிக்கும் கொடுஞ்செயலாகும்.
நாட்டை ஆளும் ஆட்சியாளர் பெருமக்கள் தற்போது இலங்கை சிறையில் வாடும் மீனவர்களையும், பிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகளையும் எப்போது மீட்கப்போகிறீர்கள்? இன்னும் எத்தனை காலத்திற்கு மீனவர்களை இப்படித் துயரக்கடலில் தத்தளிக்கச் செய்யப் போகிறீர்கள்? மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிலைத்த தீர்வு காணப்போவது எப்போது? தமிழ்நாட்டு மீனவர்கள் இந்த நாட்டின் குடிமக்களா இல்லையா? இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசிற்கு குஜராத் மீனவர்கள் கைது செய்யப்பட்டால் வரும் பரிவும், பற்றும், ஆத்திரமும், அக்கறையும் அணுவளவாவது தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படும்போது வராதது ஏன்?
அகண்ட பாரதம் பேசும் பாஜக, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தாரைவார்க்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு சொந்தமான கட்சத்தீவை மீட்க எந்த முயற்சியும் எடுக்காதது ஏன்? நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை வைத்துள்ள திமுக கூட்டணி, நாடாளுமன்றத்திற்கு உள்ளே போராடாமல் வெளியே வந்து குரல் எழுப்புவதால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு விளைந்த நன்மை என்ன? நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பிற்காக பதறி துடித்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிய திமுக அரசு, கட்சத்தீவை மீட்கவும், தமிழ்நாட்டு மீனவர்கள் நலனைப் பாதுகாக்கவும் கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறை கூட அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டாதது ஏன்?
தமிழ்நாட்டு மீனவர் நலனைப் பாதுகாக்கவும், இலங்கை இனவெறி கடற்படையால் தமிழ் மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படும் பேரவலத்துக்கு கட்சத்தீவை மீட்பது ஒன்றே நிலைத்த தீர்வாக அமையும்.
ஆகவே, தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படும் ஒவ்வொரு முறையும், கடமைக்கு கடிதம் மட்டுமே எழுதுவதைக் கைவிட்டு, நாடாளுமன்றத்தில் தமக்குள்ள உறுப்பினர்கள் பலத்தின் மூலம் இந்திய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுத்து, தற்போது இலங்கை சிறையில் வாடும் அனைத்து மீனவர்களையும், பறித்து வைக்கப்பட்டுள்ள படகுகளையும் மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள கட்சத்தீவை மீட்கும் வழக்கை விரைவுபடுத்தி, தமிழ்நாட்டு மீனவர் சிக்கலுக்கு நிலையான தீர்வினைப் பெற்றுத்தர வேண்டுமென தமிழ்நாட்டு அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.