சைபர் கிரைம் மோசடி வழக்கில் டெல்லியை சேர்ந்த 3 பேருக்கு சிறை தண்டனை

நாங்குநேரியைச் சேர்ந்த ஒருவருடைய மகளுக்கு கல்வி உதவித்தொகை வந்திருப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, வாட்ஸ்அப்பில் கியூஆர் கோடு மூலம் ரூ.1 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
சிறை தண்டனை
Published on

திருநெல்வேலி,

நெல்லை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால் மாவட்டத்தில் முதல் முறையாக சைபர் கிரைம் மோசடி வழக்கில் (Online Scholarship Fraud) குற்றவாளிகளுக்கு 2 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 17.3.2026 அன்று திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பாணான்குளத்தைச் சேர்ந்த லட்சுமணன் (வயது 48) என்பவரது மகளுக்கு கல்வி உதவித் தொகை வந்திருப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, வாட்ஸ்அப்பில் QR Code மூலம் சுமார் ரூ.1 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி தீவிர விசாரணை மேற்கொண்டு, வழக்கில் சம்பந்தப்பட்ட டெல்லியைச் சேர்ந்த ராஜு (வயது 25), ரிஷி(27), ராகுல்(35) ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.

சிறை தண்டனை:

புலன் விசாரணை முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் குற்றவாளிகள் 3 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதித்துறை நடுவர் சத்யா நேற்று குற்றவாளிகளுக்கு தலா 2 மாதங்கள் சிறை தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் சாட்சிகளை துரிதமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த திருநெல்வேலி சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி. முருகன், இவ்வழக்கில் திறம்பட புலனாய்வு விசாரணை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, வழக்கின் விசாரணைக்கு உதவி செய்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் அருண்பாண்டியன் ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பாராட்டினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com