திருநெல்வேலியில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு எழுதுகிறார்கள்

12ம்தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் இடங்களில் போதிய வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என திருநெல்வேலி கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி IV 12.7.2025 அன்று நடைபெறுவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் கூறியதாவது:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி-IV பதவிகளுக்கான தேர்வு 12.7.2025 அன்று முற்பகல் நடைபெறவுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 108 இடங்களில் 132 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வினை 36,011 பேர் எழுதவுள்ளனர்.
வருவாய்த்துறை அலுவலர்கள் தேர்விற்கு ஒருங்கிணைப்பு அலுவலராக தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு நடைபெறும் இடங்களில் போதிய வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் பொருட்களை வைப்பதற்கான பாதுகாப்பு அறை, தேர்வர்களின் பெற்றோர்கள் மற்றும் உடன் வருபர்கள் அமர்ந்திருப்பதற்கான காத்திருப்பு அறை, வினாத்தாள் தேர்வு மையத்திற்கு பத்திரமாக கொண்டு செல்வதற்கும், திருப்பி கருவூலத்தில் ஒப்படைப்பதற்கும் தேவையான வாகனம் மற்றும் பாதுகாப்பு வசதியினை காவல்துறையினருடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும். ஒரு தேர்வு மையத்திற்கு ஒரு வீடியோ கிராபரை நியமனம் செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
காவல்துறையின் சார்பில் 132 மையங்களுக்கும் ஆண் மற்றும் பெண் காவலர்களை தேவையான அளவில் நியமனம் செய்து, காலை 6 மணியிலிருந்து போதிய பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ள வேண்டும். தேர்வாளர்கள் தேர்வு மையத்திற்குள் தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வு மையங்களுக்கு அருகாமையில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தேர்வு நடைபெறும் நாளன்று மின்சாரத்துறை சார்பில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் அனைத்து தேர்வு மையங்களிலும் போதிய தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதா என்றும், அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ள போதிய வசதி உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். சுகாதாரத்துறையின் சார்பில் தேர்வு மையங்களின் அருகில் தேவையான அளவில் மருத்துவக்குழுக்களை நியமனம் செய்து பணிகளை கவனித்துக்கொள்ள வேண்டும்.
மேற்சொன்ன தேர்வு சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து தேர்வினை சுமூகமாக நடத்திட துணை ஆட்சியர் நிலையில் 11 பறக்கும் படை அலுவலர்களும், 11 பறக்கும் படைகளும், தேர்வுக்குரிய பணிகளை மேற்கொள்ள வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் நிலையில் 35 இயக்கக்குழு அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்சொன்ன தேர்வு நாளன்று தேர்வர்கள் தேர்வு எழுத வசதியாக தேர்வு மையத்திற்கு வருவதற்கும், தேர்வு முடிந்த பின் செல்வதற்கும் போதிய பேருந்து வசதிகள் போக்குவரத்து சார்பில் மேற்கொள்ள வேண்டும். அனைத்துத்துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை எவ்வித சுணக்கமும் இன்றி சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.