

சென்னை,
கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும் பல்வேறு தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தமிழகத்திற்கு அதிக அளவில் தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு, மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது.
அந்த வகையில் ஐதராபாத்தில் இருந்து 50 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் விமானம் மூலம் இன்று சென்னை வந்தடைந்தன. இந்த தடுப்பூசிகளை தேனாம்பேட்டை மாநில கிடங்கிற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். அங்கிருந்து தேவைப்படும் இடங்களுக்கு இந்த தடுப்பூசிகள் பிரித்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.