

தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கக்கரைக்கோட்டை வடக்குநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் தமன் (வயது 6). இவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் தனது பெரியப்பா மகன் பிரவீன்குமார் என்பவரின் காரில் சிறுவன் தமன் வெளியில் சென்றுள்ளார். பின்னர், வீட்டிற்கு வந்ததும் அதே பகுதியில் பிரவீன்குமார் காரை பூட்டிய நிலையில் நிறுத்தி விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் காருக்குள் இருந்த சிறுவன் செய்வதறியாமல் திணறி வந்துள்ளார். மேலும், மூச்சு விட முடியாததால் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்.. கூச்சலிட்டவாறு இருந்துள்ளார். ஆனால், ஜன்னல்கள் அடைக்கப்பட்டு இருந்ததால் சிறுவனின் அபயக்குரல் வளியில் கேட்கவில்லை.
இதனிடையே மற்றொரு புறம் தமன் எங்கே சென்றான்? என்பது தெரியாமல் அவரது பெற்றோர்கள், உறவினர்கள் அவரை தீவிரமாக தேடிக்கொண்டிருந்தனர். வீட்டின் அனைத்து வீட்டிற்கு அறைகளிலும், வெளியேயும் என நாலாபுறமும் தமனை தேடி பார்த்துள்ளனர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு இரவு காருக்குள் உறவினர்கள் பார்த்த போது தமன் மூச்சுப்பேச்சு இன்றி கிடந்துள்ளார். பின்னர், காரை திறந்து பார்க்கையில் தமன் மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்தது. இதனை கண்ட அவரது பெற்றோர்கள் மகனின் உடலை மாரோடு அணைத்துக்கொண்டு சுதறி துடித்தனர். தனது மகன் இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் பெற்றோர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது.