அரசு கல்லூரிகளின் தினக்கூலி பணியாளர்களுக்கான 9 மாத நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் - ராமதாஸ்

10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கி வந்த 41 உறுப்பு கல்லூரிகள் கடந்த 2019-ம் ஆண்டு அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டன. இந்த கல்லூரிகளில் 2006-ம் ஆண்டு முதல் உறுப்புக் கல்லூரி செயல்பட தொடங்கியதில் இருந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக துப்புரவாளர், பெருக்குபவர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் போன்ற ஆசிரியரல்லாத பணியாளர்கள் 231 பேர் தினக்கூலி அடிப்படையிலேயே பணியாற்றி வருகின்றனர்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மறு புதுப்பித்தல் அடிப்படையில் தினக்கூலி ஊழியர்களாகவே பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு நாளொன்றுக்கு 420 ரூபாய் முதல் 520 ரூபாய் வரை என மாதம் 9,240 முதல் 11,440 வரைதான் ஊதியம் வழங்கப்படுகிறது. இவர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்றி விடக்கூடாது என்பதற்காகவே அந்தந்த கல்வி ஆண்டில் புதிதாக பணியில் சேர்வதை போல ஒவ்வொரு ஆண்டும் மறு புதுப்பித்தல் அடிப்படையில் பணியாற்ற செய்கிறது பல்கலைக்கழக நிர்வாகங்கள்.

மிகக் குறைந்த சொற்ப அளவிலான ஊதியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் இவர்களுக்கு இந்த 2025-26ம் கல்வி ஆண்டுக்கான மறு புதுப்பித்தல் கூட செய்யப்படவில்லை. இவர்கள் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையிலும் 9 மாதங்களாக அந்த சொற்ப ஊதியம் கூட வழங்கப்படவில்லை. மேலும் பணியாற்றிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு மறு புதுப்பித்தல் செய்யாததும், மாத ஊதியத்தை வழங்காமலும் இருப்பது அவர்களின் தகுதி, பணித்திறன் போன்றவற்றை உதாசீனப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பங்களின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பாழாக்குவது போன்றதாகும்.

கடந்த 23.9.2024 அன்று தமிழக அரசின் உயர்கல்வித்துறை வெளியிட்ட அரசாணையின்படி இவர்களின் ஒட்டுமொத்த சம்பளத்திற்காக ஆண்டுக்கு ரூபாய் 3 கோடி தான் செலவழிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறையில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு அரசு பத்தாண்டுகளுக்கு மேலாக தினக்கூலி ஊழியர்களாக பணியாற்றும் இவர்களின் பணிகளுக்காக கடந்த 9 மாதங்களாக இந்த தொகையை கூட செலவழிக்க முடியவில்லை என்பதை ஏற்க இயலாது.

எனவே நிலுவையிலுள்ள கடந்த 9 மாதங்களுக்கான ஊதியத்தை உடனடியாக வழங்குவதுடன் இந்த 231 பேரின் தகுதி, திறமை, பணித்திறன், அனுபவம் போன்றவற்றை கருத்தில் கொண்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com