

கட்டிட மேஸ்திரி
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் ராகவ நாயுடு குப்பம் அருந்ததி காலனியை சேர்ந்தவர் ரவி (வயது 55). கட்டிடம் மேஸ்திரி. இவருக்கு ஜெயம்மாள் (45) என்ற மனைவியும், குமார் (25) என்ற மகனும், ஷோபனா (32), ரோஜா (27) என்ற 2 மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு ரவி தனது மகன் குமாருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் அம்மையார் குப்பம் கிராமத்தில் இருந்து தனது கிராமத்திற்கு சென்றார். வழியில் ஆந்திர பஸ் நிலையம் அருகே திடீரென்று நாய் ஒன்று குறுக்கே ஓடியது.
பலி
இதனால் திடீரென்று பிரேக் போட்டதில் ரவியும், குமாரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் ரவி படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவரை வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அவரது மகன் குமார் ஆர்.கே. பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.