ஊர்ப்புற நூலகர்களைப் பணி நிரந்தரம் செய்து, ஊதிய உயர்வு வழங்க அரசாணை வெளியிட வேண்டும் - சீமான்

நூலகர்களை வறுமையில் வாடவிடுவதும், போராட விடுவதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல என்று சீமான் கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கிராமப்புற நூலகங்களில் பணியாற்றி வரும் ஊர்ப்புற நூலகர்களைப் பணி நிரந்தரம் செய்யாமலும், உரிய ஊதியம் வழங்காமலும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. ஊர்ப்புற நூலகர்களில் பெரும்பாலானோர் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்களாக உள்ள நிலையில், அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளை வழங்க மறுத்து, அவர்களைப் பல ஆண்டுகளாக அலைக்கழிப்பது என்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது.

Also Read
சிறப்பு நிதி எனும் திமுகவின் தேர்தல் கால சித்து விளையாட்டுகள் எடுபடாது - டிடிவி தினகரன்
கோப்புப்படம்

தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களில் இயங்கிவரும் நூலகங்களில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 17 ஆண்டுகளாக, ஏறத்தாழ 1,512 நூலகர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரும் தங்களை, தற்போதுள்ள சிறப்பு காலமுறை ஊதியத்திலிருந்து, காலமுறை ஊதியத்திற்கு மாற்றிப் பணி நிரந்தரம் செய்யுமாறும், உரிய ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றை வழங்கிடுமாறும் கோரி, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், முந்தைய அதிமுக அரசு அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வயிற்றில் அடித்தது. ஊர்ப்புற நூலகர்களுக்கு அதிமுக அரசு செய்த அதே துரோகத்தை திமுக அரசும் செய்து வருவது பெருங்கொடுமையாகும்.

ஊர்ப்புற நூலகர்கள் கடந்த 17 ஆண்டுகளாகப் பணியாற்றியும்கூட, இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படாததால் அவர்கள் அரசு ஊழியர்களாகக் கருதப்படுவதில்லை. இதனால் அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கக்கூடிய விழாக்கால ஊக்கத்தொகை, பணிக்கொடை, பணப்பலன், உரிய ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு ஆகியவை ஊர்ப்புற நூலகர்களுக்கு கிடைக்கப்பெறாமல் தவித்து வருகின்றனர். ஒரு நூலகம் திறக்கப்படும்போது பல சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்ற பொன்மொழிக்கு ஏற்ப, அறிவை வளர்க்கும் அரும்பணியில் ஈடுபட்டு வரும் நூலகர் பெருமக்களை வறுமையில் வாடவிடுவதும், அடிப்படை உரிமை கேட்டு வீதியில் இறங்கிப் போராடவிடுவதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

Also Read
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கோவில் பூசாரிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
கோப்புப்படம்

உள்ளாட்சித்துறை சொத்துவரியில் மாவட்ட நூலக ஆணைக்குழுவிற்கு 2 சதவீதமாக இருந்த சொத்துவரி தற்போது 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமே சொத்துவரி 2,000 கோடியாக உள்ள நிலையில் அதில் நூலக வரி 200 கோடியாகும். இதே போன்று தமிழ்நாடு முழுவதும் மேலும் 1,000 கோடி ரூபாய் வருமானம் நூலகங்கள் மூலம் தமிழ்நாடு அரசுக்கு கிடைத்திடும்போதிலும், வெறும் 1,500 நூலகர்களை பணி நிரந்தரம் செய்ய திமுக அரசு மறுப்பது, அறிவை வளர்க்கும் நூலகர் பெருமக்களின் வயிற்றில் அடிக்கும் செயலன்றி வேறென்ன? ஒவ்வொரு மாவட்டத்திலும் கலைஞர் நூலகம் அமைக்க தலா 500 கோடி ரூபாய் செலவிடும் திமுக அரசு, கிராமப்புற கிளை நூலகங்களை தரம் உயரத்தாமலும், நூலகர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமலும் தொடர்ந்து ஏமாற்றி வருவது ஏன்? இதற்குப் பெயர் திராவிட மாடல் அல்ல கொடுங்கோன்மை மாடல்!

Also Read
பெண்களை ரகசியமாக செல்போனில் புகைப்படம் எடுத்து ரசித்த வாலிபர் கைது
கோப்புப்படம்

ஆகவே, தமிழ்நாடு அரசு ஊர்ப்புற நூலகர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து உரிய ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டுமெனவும், அரசு ஊழியர்களுக்கு வழங்கும் அனைத்து உரிமைகளும் நூலகர் பெருமக்களுக்கும் கிடைக்கவும் ஆவன செய்திட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com