தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது - வானிலை மையம் தகவல்

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது - வானிலை மையம் தகவல்
Published on

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தென்கழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.

அடுத்த 2 தினங்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும். அதன்பிறகு தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 31-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபடைந்து வரும் 1-ம் தேதி இலங்கை கடற்பகுதிகளை சென்றடையக்கூடும்.

இதன் காரணமாக வடதமிழக கடலோ மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வரும் 29-ம் தேதி லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோன்று, வரும் 30-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில ஒருசில இடங்களில் வரும் 31-ம் தேதி இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com