

சென்னை,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவருக்கு 90 நாட்கள் விடுப்பு (பரோல்) வழங்கக்கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் விசாரித்து வருகின்றனர். அப்போது, மனுதாரரின் கோரிக்கையை சிறைத்துறை நிராகரித்து விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு இறுதி விசாரணைக்காக நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பு பதில் மனுவை தாக்கல் செய்த கூடுதல் குற்றவியல் வக்கீல் ஆர்.பிரதாப்குமார், பேரறிவாளன் கடந்த ஜனவரி மாதம் தான் விடுப்பில் சென்று விட்டு சிறைக்குள் வந்துள்ளார். சிறைவிதிகளின்படி 2 ஆண்டுகளுக்கு பின்னர் தான் மறுபடியும் அவருக்கு சாதாரண விடுப்பு வழங்க முடியும் என்று கூறினார். மேலும், பேரறிவாளன் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அதற்கான மருத்துவ சான்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளதால், பேரறிவாளனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு விடு மோ? என்று மனுதாரர் அச்சப்படதேவையில்லை. பேரறிவாளன் உள்பட 7 பேரையும் முன்கூட்டியே விடுவிக்க அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தாலும், சிறைக்குள் இருக்கும் வரை அவர்கள் சிறை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.