அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் பொய் குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக சந்திக்க தயார்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் பொய் குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் பொய் குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக சந்திக்க தயார்
Published on

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

பழிவாங்கும் நடவடிக்கை

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களிலும், அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் ஒரு சிலரின் இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துவதாக வரும் செய்திகள், மக்கள் நலப் பணிகளில் முழு கவனம் செலுத்தாமல், தி.மு.க. அரசு அ.தி.மு.க.வினரை பழிவாங்கும் நடவடிக்கைகளில் அக்கறை காட்டுகிறதா என்ற ஐயப்பாடும், வருத்தமும் மனதில் எழுகின்றன.

கட்சியின் துடிப்பான செயல் வீரர் எஸ்.பி.வேலுமணி மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் திட்டமிட்டு பொய்க் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுவந்த நிலையில், இன்றைய சோதனைகள் கண்டிக்கத்தக்கவை என்றே கருதுகிறோம்.

சட்டரீதியாக சந்திக்க தயார்

அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் பொய்க் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திக்க, அ.தி.மு.க. எப்பொழுதும் தயாராகவே உள்ளது. ஆனால், ஆதாரம் ஏதுமின்றி உண்மை என்ன என்பதை கண்டுபிடிக்கும் முன்னரே ஊழல் பழி சுமத்துவது நியாயமற்றது.

இத்தகைய சோதனைகள் அனைத்தையும் தாங்கி நின்று, அ.தி.மு.க. மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடும். அன்பு வழியிலும், அற வழியிலும் அரசியல் தொண்டாற்றும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com