அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 1-ந் தேதிக்குள் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும்

ஜூன் 1-ந் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும் என கல்வி கட்டண நிர்ணயக்குழு தலைவர் நீதிபதி டி.வி.மாசிலாமணி கூறினார்.
அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 1-ந் தேதிக்குள் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும்
Published on

சென்னை,

தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் கல்வி கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக தமிழக அரசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய கமிட்டி அமைக்கப்பட்டது.

அந்த கமிட்டி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ளது. இதன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி டி.வி.மாசிலாமணி உள்ளார். கல்வி கட்டணம் நிர்ணயம் குறித்து டி.வி.மாசிலாமணி கூறியதாவது:-

தமிழகத்தில் சுமார் 10 ஆயிரம் தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு 5 ஆயிரத்து 500 பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்து இணையதளத்தில் (www.tamilnadufeecomittee.com) வெளியிட்டு உள்ளோம்.

மீதம் உள்ள 4 ஆயிரத்து 500 பள்ளிகளுக்கு ஜூன் 1-ந் தேதிக்குள் கல்வி கட்டணம் நிர்ணயம் செய்துவிடுவோம். பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கு முன்பாக 2018-2019-ம் ஆண்டுக்கான அனைத்து பள்ளிகளுக்கும் கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.

கட்டணம் நிர்ணயிக்கப்படாத 4 ஆயிரத்து 500 பள்ளிகளில், ஆயிரத்து 844 பள்ளிகள் கருத்துருவை அனுப்பியதால் 1000 பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 850 பள்ளிகள் கருத்துருவை அனுப்பின. அந்த பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அனுப்பாத பள்ளிகள் உடனடியாக கருத்துருவை கமிட்டி இணையதளத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com