கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 18 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

சிதம்பரத்தில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 18 பவுன் தாலி சங்கிலியை பறித்த 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 18 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
Published on

சிதம்பரம்:

சிதம்பரம் கனகசபைநகர் தில்லை நடராஜர் சாலையை சேர்ந்தவர் கணேஷ். எலக்ட்ரீசியனான இவர், சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் தனது மனைவி மகாலட்சுமியுடன்(50) மோட்டார் சைக்கிளில் கனகசபைநகர் 4-வது குறுக்குத் தெருவில் சென்றார். அப்போது இவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயதுடைய 2 வாலிபர்கள் திடீரென மகாலட்சுமி கழுத்தில் கிடந்த 18 பவுன் தாலி சங்கிலியை பறித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதி மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டனர். இதில் சுதாகரித்துக்கொண்ட 2 வாலிபர்களும் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் கணேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதோடு மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் 2 வாலிபர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என்றும் ஆய்வு செய்து வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com