வேலைவாய்ப்பு முகாமில் 256 பேருக்கு பணி நியமன ஆணை

நாகர்கோவிலில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 256 பேருக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்
வேலைவாய்ப்பு முகாமில் 256 பேருக்கு பணி நியமன ஆணை
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூயில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். விஜய் வசந்த் எம்.பி., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு நிறுவன வேலைகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உடனடி ஆணைகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக தமிழகம் முழுவதும் 100 சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் நடந்த இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டன. 2,124 வேலைநாடுனர்கள் கலந்துகொண்ட இந்த முகாமில் 256 வேலைநாடுனர்கள் பணி நியமனம் பெற்றனர்.

432 வேலைநாடுனர்கள் முதற்கட்ட நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டுள்ள அனைத்து இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களும் தங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஜெரிபா ஜி.இம்மானுவேல், திட்ட இயக்குனர் (மகளிர்திட்டம்) பீபி ஜாண், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பெர்பட் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com