சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருவரும் 2-ந்தேதி தவெகவில் இணையவுள்ளதாக தகவல்

முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் இருவரும் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருவரும் 2-ந்தேதி தவெகவில் இணையவுள்ளதாக தகவல்
Published on

சென்னை,

அதிமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவது எடப்பாடி பழனிசாமி மட்டுமல்லாது கட்சி தொண்டர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அதிமுக அதிருப்தி அணி

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக, திமுகவுக்கு அடுத்து 3 வது இடத்தை அதிமுக பிடித்ததால், அக்கட்சியில் பலர் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் பிரிந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அணியை உருவாக்கினர். தங்கள் ராஜினாமா கடிதத்தையும் வழங்கினர்.

இதன் பிறகு நடந்த சமாதான பேச்சுக்கு பிறகு எஸ்.பி. வேலுமணி தலைமையில் சில உறுப்பினர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாகத் திரும்பினர். எனினும் சி.வி. சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதை தவிர்த்து வந்தனர்.

ராஜினாமா

இதற்கிடையே, அதிமுக அதிருப்தி அணியில் இருந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

இதனை தொடர்ந்து, அதிமுக எம்.எல்.ஏ.க்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சி.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் நேற்று தவெகவில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் நடிகரும், இயக்குநருமாக பாக்கியராஜ் மறைவு உள்ளிட்ட காரணங்களால் இந்த நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டது.

சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இந்த நிலையில், தங்களது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்துள்ள சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருவரும் நாளை மறுநாள் (2-ந்தேதி) தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேலான தங்களது ஆதரவாளர்களுடன் முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் விடுதியில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர்களான எம்.எஸ்.எம். ஆனந்தன், மற்றும் திருச்சியை சேர்ந்த வளர்மதி ஆகியோரும் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்து ராஜினாமா

தவெகவில் இணையவுள்ள சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருவருக்கும் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவது எடப்பாடி பழனிசாமி மட்டுமல்லாது கட்சி தொண்டர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com