தீவுத்திடலில் கேப்டன் விஜயகாந்தின் உடல்: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள், ரசிகர்கள்

தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.
Published on

சென்னை,

தேமுதிக நிறுவனரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 6.10 மணி அளவில் காலமானார். அவரின் உடல் இன்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாலை 4.45 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளது. தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது உடலுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இந்த சூழலில் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத் திடலில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இருந்து விஜயகாந்தின் உடல் வாகனம் மூலமாக பூந்தமல்லி சாலை வழியாக தீவுத்திடலுக்கு எடுத்து வரப்பட்டது.

விஜயகாந்தின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக நேற்று இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் சென்னை தீவுத்திடலில் குவிந்துள்ளனர்.

தீவுத்திடலுக்கு இன்று காலை கொண்டு வரப்பட்ட விஜயகாந்தின் உடல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் இங்கிருந்து ஊர்வலமாக தேமுதிக தலைமை அலுவலகம் நோக்கி எடுத்து செல்லப்பட்டு இன்று மாலை 4.45 மணிக்கு விஜயகாந்தின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com